புதுடில்லி : காய்கறிகள் மீது மூன்று மாத காலத்திற்கு, உள்ளூர் வரிகள் விதிப்பதை நிறுத்தி வைக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. விலைவாசி உயர்வை தடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநில அரசுகளின் தலைமைச் செயலர்களுடன் மத்திய கேபினட் செயலர் சந்திரசேகர் நேற்று வீடியோ கான்பரன்சிங் முறையில் உரை நிகழ்த்தினார். அப்போது, காய்கறிகள் மீது மூன்று மாத காலத்திற்கு உள்ளூர் வரிகளை விதிப்பதை நிறுத்தி வைக்கும்படி, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் மீது விதிக்கப்படும் ஆக்ட்ராய் வரி (இந்த வகை பொருட்களை நகருக்குள் கொண்டு வர விதிக்கப்படும் வரி) மற்றும் சந்தை கட்டணங்கள் உட்பட பல வகையான கட்டணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகின்றன. சில மாநிலங்களில் இந்த வகை கட்டணங்கள் 40 சதவீதம் வரை விதிக்கப்படுகின்றன.இந்த வகை வரிகளை நிறுத்தி வைக்கும் போது, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், இந்த நடவடிக்கைளால் மாநில அரசுகளுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும் என்பது தெரியவில்லை.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி உயர் மட்டக் குழுவின் கூட்டம் 7ம் தேதி டில்லியில் நடை பெற்றது. சோனியா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், தெலுங்கானா தனி மாநில கோரிக்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

No comments:
Post a Comment