இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை, பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காய்கறிகளின் விலை, நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, நாடு முழுவதும் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய செய்துள்ளது. அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல், ஒருவித கலக்கத்துக்கு ஆளாகியுள்ளனர் நடுத்தர மக்கள். உணவுப் பொருட்களில் கட்டாயம் சேர்க்கப்படும் பொருளான வெங்காயத்தின் விலையை கேட்டால், தலையே சுற்றுகிறது. இப்போதெல்லாம், வெங்காயத்தை உரிக்கும்போது கண்ணீர் வருவதற்கு பதிலாக, வெங்காயத்தின் விலையை கேட்கும்போதே, தாரை, தாரையாக கண்ணீர் வருகிறது.கை நிறைய பணத்தை கொண்டு சென்று, பை நிறைய பொருட்களை வாங்கிய காலம் மலையேறிப் போய் விட்டது. இப்போது, பை நிறைய பணத்தை கொண்டு சென்று, கை நிறைய பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது.காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கிடு, கிடு விலை உயர்வு காரணமாக, நாட்டில் உணவுப்பொருள் பணவீக்கம் 14 சதவீதத்தை தாண்டி, பொருளாதார நிபுணர்களையே கிறுகிறுக்க வைத்துள்ளது.
அனைத்து பொருட்களும் உயர்வு: கடந்த மாத இறுதியில் வெங்காயத்தின் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து, ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, சென்னையில் 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வை தடுக்க, மத்திய அரசு, வெங்காய இறக்குமதிக்கான வரியை ரத்து செய்தது.வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு, ஜனவரி 15ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே கையை மீறி போய்விட்ட வெங்காயத்தின் விலையை, அரசின் இந்த நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.தக்காளியின் விலையும் கிலோ 55 ரூபாயாக அதிகரித்தது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு வர வேண்டிய தக்காளியின் வரத்து, போதுமான அளவுக்கு இல்லை. இதனால், இன்னும் ஒரு மாதத்துக்கு இந்த விலை உயர்வு, மக்களை ஆட்டிப் படைக்கும் என, சென்னை வியாபாரிகள் கூறுகின்றனர்.

No comments:
Post a Comment