உத்தரப்பிரதேச மாநிலம், லக்னௌவில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிடும் பாஜக தலைவர்கள் (இடமிருந்து) கல்ராஜ் மிஸ்ரா, சூர்ய பிரதாப் ஷாகி,
லக்னெள, ஜன. 27: முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் 4.5 சதவீத இட ஒதுக்கீட்டை உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும்போது ரத்து செய்வோம் என பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.இந்த நிகழ்ச்சியில் கட்சித் தலைவர்கள் உமா பாரதி, சூர்ய பிரதாப் ஷாஹி, கல்ராஜ் மிஸ்ரா, முக்தர் அப்பாஸ் நக்வி, சுதீந்திர குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தேர்தல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளோம். போலி மதச்சார்பின்மை, வாக்கு வங்கி அரசியல் காரணமாகவே காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகள் அகற்றப்படும்.இடஒதுக்கீடு பெறாத சமுதாயங்களைச் சேர்ந்தவர்களில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை ஆய்வு செய்வதற்காக கமிஷன் அமைக்கப்படும்.விவசாயிகளுக்கு ஒரு சதவீத வட்டியில் கடன் அளிக்கப்படும். ரூ.1,000 கோடியில் விவசாயிகள் நல நிதியம் அமைக்கப்படும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் அறிவிக்கப்படும்.65 வயதைக் கடந்த சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நெசவாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.300 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்படும்.வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசமாகப் பசு அளிக்கப்படும். பசுவதை முற்றிலுமாக தடை செய்யப்படும்.ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டேப்லேட், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், சைக்கிள் ஆகியவை வழங்கப்படும்.முதல்வரிடமும் விசாரணை நடத்தும் அதிகாரம் லோக் ஆயுக்தவுக்கு வழங்கப்படும்.இப்போதைய அரசின் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி கமிஷன் அமைக்கப்படும். ஊழல் புகார் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.முஸ்லிம்கள் பொருளாதார, சமூக, கல்விரீதியாக முன்னேற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment