அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இப்னுமாஜா பக்கம் – 4
பக்கம் – 4 (ஹதீஸ்கள் 31 முதல் 41 வரை)அத்தியாயம்: முகத்திமா – முகப்பு
ஹதீஸ் எண்: 31
என் பெயரால் பொய் கூறாதீர்கள்! ஏனென்றால் என் பெயரால் பொய் கூறுவது நரகில் சேர்க்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.)
ஹதீஸ் எண்: 32
யார் என் பெயரால் பொய் கூறுகிறானோ, அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘வேண்டுமென்றே’ என்ற வார்த்தையையும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நான் நினைக்கின்றேன் என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது)
ஹதீஸ் எண்: 33
யார் என்மீது திட்டமிட்டு பொய் கூறுகின்றானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)
ஹதீஸ் எண்: 34
நான் சொல்லாத ஒன்றை என் மீது யார் இட்டுக்கட்டிக் கூறுகிறானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் எண்: 35
என்னைப் பற்றி அதிகமாக அறிவிப்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன், என் பெயரால் சொல்வதென்றால் உண்மையையே சொல்ல வேண்டும், நான் சொல்லாத ஒன்றை என் பெயரால் எவரேனும் கூறினால் அவர் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் இந்த மிம்பர் (படி) மீது இருந்து கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று அபூகதாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மத், தாரிமி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)
ஹதீஸ் எண்: 36
இப்னு மஸ்வூது (ரலி) மற்றும் சிலரிடம் நான் (ஹதீஸ்களைக்) கேட்பது போல், நீங்கள் நபி (ஸல்) வாயிலாக எந்த ஒன்றையும் கூற நான் கேட்டதில்லையே! அது ஏன் என்று ஸுபைர் இப்னுல் அவாம் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நபி (ஸல்) அவர்களை நான் பிரிந்தது இல்லை.
எனினும் ‘யார் என் பெயரால் பொய் கூறினானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு சொல்லை நான் செவியுற்றுள்ளேன். (அதற்கு அஞ்சியே நான் அதிகமாக அறிவிப்பதில்லை) என்று ஸுபைர் இப்னுல் அவாம் (ரலி) கூறியதாக அவரது மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இந்தச் செய்தி புகாரியிலும் இடம் பெற்றுள்ளது.)
ஹதீஸ் எண்: 37
யார் என் பெயரால் வேண்டுமென்றே பொய் கூறுகிறானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள்.
குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம் நூலில் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண்: 38
நிச்சயம் பொய் தான் என்று தெரிந்து கொண்டே என் பெயரால் யாரேனும் ஒரு செய்தியைக் கூறினால் அவனும் பொய்யர்களில் ஒருவனாவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் எண்: 39, 40, 41
மேற்கூறிய இதே ஹதீஸே ஸமுரத் இப்னு ஜுன்துப் (ரலி) அறிவிப்பதாக 39 வது ஹதீஸும், அலி (ரலி) அறிவிப்பதாக 40 வது ஹதீஸும், முகீரா இப்னு ஷுஃபா (ரலி) அறிவிப்பதாக 41 வது ஹதீஸும் இடம் பெற்றுள்ளது.
(குறிப்பு: இந்த நான்கு ஹதீஸ்களும் முஸ்லிம் நூலிலும் இடம் பெற்றுள்ளது.)
No comments:
Post a Comment